சென்னையில் போபால் ஓவியக்காட்சி

0 comments

கற்பனைக்கு அடங்கா
மனவெளிக்கு அழைத்துச் சென்று
மகிழ்ச்சியின் நிழல் பரப்பும்,
வண்ணப் பூச்சுக்கள் இல்லை.

துரோகமும், லாபவெறியும்
கைகோர்த்துக் கொண்டு
போபால் வீதிகளில்
வீசியெறிந்த பிணங்களின் குவியல்,
அதற்காக,
இன்றும் கதறிடும்
அழுகையும் விம்மலும்
செவியில் அறைந்து கொண்டிருக்க,
தூரிகையை வண்ணங்களில் புதைத்து
அழகு பார்ப்பது முரணின் உச்சம்.

நீதிக்கான குரலை
கோடுகளால் பேசும்
கனமாய் விரிகிறது…
இந்த காட்சிப் படிமங்கள்.

1984, டிசம்பர் 2, போபால் – யூனியன் கார்பைடு: துரோகத்தின் விலை என்ன?
ஓவியக் கண்காட்சி

ஓவியங்களின் வழியே கலைபூர்வமான
தன் எதிர்வினையைத் தருகிறார் தோழர் முகிலன் (ம.க.இ.க)

ஓவியக் காட்சி திறப்பு: ஓவியர் மருது

ஓவியக் காட்சி பற்றி கலந்துரையாடல்: மாலை 6 முதல் 7.30வரை

நாள்: 10.10.2010 ( காலை 8 முதல் இரவு 8 வரை)

இடம்: செ.தெ.தெய்வநாயகம் மேல்நிலைப்பள்ளி, தியாகராயநகர், வெங்கட்நாராயணா சாலை, நடேசன் பூங்கா அருகில்.

- மக்கள் கலை இலக்கியக் கழகம், சென்னை

-நன்றி வினவு

அண்டை வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே - அரசூரான்

2 comments
அமெரிக்கா அடுத்த நாடுகளை நடத்தும் விதத்தை பார்த்தால் எனக்கு உடன் நினைவிற்க்கு வரும் முதியோர் மொழிதான் ”அண்டை வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே”. மிகவும் சுவராசியமான சொல்வழக்கு/சொலவடை இது.

அடுத்த வீட்டில் இருந்து வரும் நெய்வாசனையை மோப்பம் பிடித்து, அதை சாப்பிட வேண்டி தன் மனைவியின் கையை விட்டு கவர்ந்து வரச்சொல்லும் கணவனின் மனப்போக்கு. கவர்ந்து வந்தால் மனைவியின் கையோடு நக்கிக் கொள்ளலாம், ஒருவேளை மனைவி நெய் திருடுவதை கண்ட அடுத்த வீட்டுக்காரன் மனைவியின் கையில் அடித்தால் மனைவியின் கைதானே நமக்கென்ன ஆச்சு என்று இருந்து விடலாம் என்ற எண்ணம்.

அமெரிக்கா அல்லாத நாடுகளின் காற்றுத் தூய்மை பற்றி வாய் கிழியப் பேசும் அமெரிக்காதான் அதற்காண காரணகர்த்தா என்று அதற்க்கு நன்றாகவே தெரியும். அது தன் நாட்டின் நலன் கருதி அதிகச் சுகாதாரக்கேடு விளைவிக்கும் தொழிற்ச்சாலைகளை வெளி நாட்டிற்கு மங்கள வாத்தியத்துடன் கொடுத்துவிடும் (என்ன ஒரு நல்ல எண்ணம்). மங்கள வாத்தியம் என்று நான் குறிப்பிடுவது அந்த தொழிற்ச்சாலை தொடங்குவதற்காண எந்திரம், பண உதவி மற்றும் தொழில் நுட்பம் என பலவகையில். அதை பெற்றுக்கொள்ளும் நாடுகளும் ( மஞ்சள் தண்ணீரும் மாலையும் இடப்பட்ட ஆடு தான் வெட்டப்பட போகிறோம் என்பது அறியாமல் தலையாட்டி வருவது போல் ) தன் நாட்டின் பொருளாதார வறுமையிலிருந்து விடுபட தெரிந்தோ தெரியாமலோ அந்த தொழிற்ச்சாலைகளை நிறுவ தங்கள் நாட்டிற்க்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்க்கின்றன.

உதாரணத்திற்க்கு சொல்ல வேண்டும் என்றால், ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள், தோல் பதனீடு மற்றும் சாயத் தொழில்கள். சீனாவில் தயாராகும் விளையாட்டுப் பொருட்களில் காரீயத்தின்(லெட் கன்டண்ட்) அளவை கண்டு அவற்றை தடைசெய்யும் அமெரிக்க அரசு அதை தயாரிக்கச் சொல்லும் நிறுவனங்களையோ, முதலாளிகளையோ ஒன்றும் சொல்லாது. தமிழகத்தில் திருப்பூர் மற்றும் வாணியம்பாடியில் சாயம் மற்றும் தோல் கழிவுகளால் மாசுப்படும் சுற்றுச் சூழலையும், குடிக்க பயணற்றுப் போகும் நிலத்தடி நீரையும் பற்றி கவலைப்படாமல் அவர்களுக்கு வந்துசேரும் ஆடை மற்றும் தோல் பொருட்களின் தரக்கட்டுபாட்டில் மட்டுமே கவலைப்படும்.

இப்படி தன் நாட்டின் தரக்கட்டுப்பாட்டிற்க்காக கவலைப்படும் அமெரிக்கா பல்லாயிரக்கணக்காண உயிர்களின் பலிக்கும், அதனால் இன்றுவரை ஏற்பட்டுக்கொண்டிருக்கும் சுகாதாரக் கேட்டிற்க்கும், இருபது ஆண்டுகளாக சரியான நீதிக்காக போராடிக் கொண்டிருப்போருக்காகவும் என்ன செய்தது?

பால் பால் போபால்

இன்றைக்கு செத்தால்

நாளைக்குப் பால்

போபாலில் செத்தால்

தேவையில்லை கள்ளிப்பால்

என்று போபாலில் ஒருவேளை பாலுக்கு அழும் குழந்தைக்கு பாட்டு பாடிக்கொண்டிருக்கின்றது. யூனியன் கார்பைட் நிறுவன தயாரிப்புகளை பெரிதும் அனுபவித்தது அமெரிக்கா தானே? தயாரிப்புகள் மட்டுமா? ஐம்பதியொரு சதவிகித பங்குகளை வைத்துக்கொண்டு 170 மில்லியன் அமெரிக்க டாலரை வருமானமாக ஈட்டிய பொழுதுவரை அது அமெரிக்க நிறுவனம். 1984-ல் பல்லாயிரம் இந்தியருக்கு சங்கு ஊதியபின் 1987-ல்அமெரிக்க நீதித்துறை சொல்கிறது அது தனிப்பட்ட, இந்திய குடிமக்கள் வேலைசெய்யும், இந்திய குடிமக்களால் நிறுவகிக்கப்பட்ட நிறுவனம், எங்களுக்கும் அதற்க்கும் பொருப்பு இல்லை என்று.

இன்று, அமெரிக்காவின் கல்ஃப் ஆஃப் மெக்ஸிகோ-வில், பிரிட்டிஷ் பெட்ரோலிய நிறுவனத்தின் ஆழ்குழாய் எண்ணைக் கிணற்றில் (ஏப்ரல், 2010) ஏற்ப்பட்ட துவாரத்தினால் சிலர் (11 பேர்) உயிரிழந்து, மேலும் எண்ணைக்கசிவு ஏற்ப்பட்டு சுற்றுப்புறச் சுகாதாரக்கேடு ஆனதால் அதை உடனே இராணுவத்தினர் உதவிகொண்டு துடைக்கிறது, இன்றும் துடைத்துக்கொண்டு இருக்கின்றது. ஏன்? காரணம் இவ்விபத்து நிகழ்ந்தது அமெரிக்க மண்ணில், பாதிக்கப் பட்டது அமெரிக்க மக்கள், அது மட்டுமா? எண்ணை நிறுவனமோ ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்தது (அண்டை வீட்டு நெய்). பிரிட்டிஷ் பெட்ரோலிய நிறுவனம் இந்த விபத்திற்க்கு (சிந்திய எண்ணையை நக்கித் துடைக்க) செலவிட்ட தொகை சுமார் 32 பில்லியன் அமெரிக்க டாலர். அமெரிக்காவிற்க்கு பிரிட்டிஷ் பெட்ரோலிய நிறுவனம் வெரும் பெண்டாட்டி கையே, வலித்தால் என்ன வீங்கினால் என்ன?

எண்ணை சிந்தியதற்க்கு இவ்வளவு பாடுபடும் அமெரிக்கா, இந்திய மண்ணில் – போபாலில் சிந்திய இரத்தத்திற்க்கும், சிதறிய் உயிருக்கும் கவலைப்படாது கண்டனத்திற்க்கும் வருத்தத்திற்க்கும் உரியது.

பிறர்கின்னா முற்ப்பகல் செய்யின் தமக்கின்னா

பிற்ப்பகல் தாமே விலையும்

மக்களாட்சியின் உளுத்துப் போன தூண்கள்

2 comments

ஒரு நிகழ்வின் இருபத்தைந்து ஆண்டுகள் நிறைவு என்பது ஏனைய சம்பவங்கள் எனில் கொண்டாட்டமாக இருந்திருக்கக் கூடும். அது சமயம் அது குறித்து பல அறிக்கைகள் வெளியிட்டு பற்பல கொண்ட்டாட நிகழ்வுகள் கூட அரசால் ஏற்பாடு செய்யப்பட்டு முடிந்த அளவு கூத்தடித்திருப்பார்கள். ஆனால் இந்நிகழ்வின் இருபத்தைந்து ஆண்டில் வெளிவந்த இவ்வழக்கின் தீர்ப்பானது இந்திய மக்களாட்சியைப் பீடித்த புற்றுநோய் முற்றிப்போனதன் மருத்துவ அறிக்கையாக வெளிப்பட்டது.

இது குறித்து யாரும் வேதனைப்பட்டதாகவோ அல்லது அதிகம் சிந்தித்ததாகவோ தெரியவில்லை. அப்படி செய்திருந்தால் மட்டுமே நமக்கெல்லாம் ஏமாற்றமாக இருந்திருக்கும். நல்லவேளை அரசியல் தலைவர்களும் அரசுயர் அதிகாரிகளும் இந்திய தேசத்தின் நீதித்துறையும் இந்தமுறை மக்களை ஏமாற்றவில்லை என்பது பெருமகிழ்ச்சியளிக்கக் கூடிய விடயமாகும்.

உண்மைதான் மக்களே நம்புங்கள் அவர்கள் உங்களை ஏமாற்றினார்களோ இல்லை ஏமாற்றவில்லையோ தெரியவில்லை ஆனால் பெருமுதலாளிகளை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடித்து விட்டார்கள் என்பது உண்மை.

இருபத்தைந்து ஆண்டுகள் நடந்த (படுத்துக்கிடந்த) ஒரு வழக்கின் அது என்னவென்றால் பல்லாயிரம் மக்களை நடுஇரவில் கவனக்குறைவால் மரணிக்கச்செய்ததும் மற்றும் சில லட்சம் மக்களை முடவோராக்கியும் அவர்களது அடுத்த தலைமுறைக்கும் அந்த அத்துணை கொடுமைகளையும் அனுபவிக்கத்தந்ததுமான ஒரு கொடூர குற்றத்தின் தண்டனை நிர்ணயிக்கப்பட்டது அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகளும் சில ஆயிரம் அபராதமும். உடனே இயற்கை நீதியின் நியதிப்படி மேல்முறைய்யீட்டற்கு விண்ணப்பித்திருப்பதால் ஜாமீனில் வெளிவந்தார்கள்.

இவ்வழக்கில் இந்திய அரசியலமைப்பின் மூன்று தூண்கள் எவ்வாறு கடமையாற்றின என்றறிவது இந்திய மக்களாட்சியின் உளுத்துப் போன தூண்களின் உண்மை நிலையை அறியலாம்.

முதல் தூணாம் அரசு

அரசு என்பது ஆரம்ப கால குழு முறை அரசிலிருந்து மன்னராட்சி கண்டு இப்போதிருக்கும் மக்களாட்சியாக பரிணமிக்க எடுத்துக் கொண்ட காலம் கொஞ்சமல்ல. கடந்து வந்த பாதையும் இனிய எளிய பாதையல்ல. இத்துணை காலகட்டங்களிலும் நடந்து வந்த அத்துணை முறைகளிலும் ஆகச்சிறந்த அரசியல் முறையானது இந்த மக்களாட்சி முறைதான்.

மக்களாட்சியின் தத்துவம்தான் படிக்க கேட்க என்ன இனிதாக இருக்கிறது

மக்களே மக்களால் மக்களுக்காக.

இப்பேர்பட்ட மக்களாட்சி நிலவும் இந்தியாவில் அரசானது மத்திய அரசு மாநில அரசு என்ற இரு பிரிவுகளில் வருகிறது.

மாநில அரசு

இன்னும் உயிருடன் உள்ள அன்றைய மாநில முதலமைச்சருக்கு இந்த பத்திரிக்கைகாரர்களின் கேள்விகளுக்கு பதில் தர வேண்டிய இக்கட்டான நிலையில் என்ன சொல்வது என்று தெளிவாகச் சொல்லாமல் விட்டு விட அவர் பாவம் சில நாட்களாக எங்கோ போய் சாதாரண திருடனாட்டம் ஒளிந்து கொள்ள வேண்டி வந்தது பாருங்கள் பாவம் இந்த நிலை யாருக்கும் வரக்கூடாது. நல்ல வேலை யாரும் ஆள் கொணர்விப்பு மனு போடும் முன்னர் கண்டு பிடித்து வெளிச் சொல்ல வந்து விட்டார். இறந்து போன நரசிம்ம ராவ் (யாருக்கு மகனெல்லாம் அரசியல்ல பெரிய ஆளா வளரலையோ) அவர்தான் காரணமாம். ஆண்டர்சன் என்ற நல்ல பாம்புக்கு விடம் ரொம்ப அதிகம் பாருங்க அதனை அடிக்கத்தான் முடியல. அதனால அதுகிட்ட இருந்து மக்களை காப்பாற்றத்தான் அவனை அமெரிக்கா அனுப்பி விட்டுட்டோம்னு சொல்லாம விட்டாரு பாருங்க அதுவரைக்கும் சந்தோசம்.

நான் பல சமயம் எண்ணியதுண்டு. தி மு க வினரைப்போல படித்த கொள்கை வழி வந்த தனது மகனுக்கு ரசிய கம்யூனிஸ பெருந்தலைவரின் பெயரைச் சூட்டிய அரசியலமைப்பில் திருத்தம் வேண்டி கமிட்டி அமைத்து மத்திய அரசுக்கே பரிந்துரையை அனுப்பிய இன்னமும் மாநில சுயாட்சி வேண்டி கடிதம் எழுதும் தலைவரே அந்நிய நாட்டின் நிறுவனங்களுக்கு சிவப்பு கம்பளம் விரிப்பத்தில் மற்றைய மாநிலங்களுக்கு உதாரண புருஷனாக மாறிப்போகையில் மக்களாட்சித் தத்துவத்தில் வரும் மக்களுக்கு என்பதனை அதன் தலைவர் செந்தமிழ் கொண்டு மிகச்சரியாக உணர்ந்து ஆட்சி புரியும் போது மத்திய அரசின் கைக்கூலியாக அவர்களின் தயவிலும் கடைக்கண் கருணையிலும் ஆண்டு கொண்டிருந்த அதே கட்சியின் மாநிலப் பிரிவை என்னவென்று நொந்துகொள்வது.

எனவே முதுகெழும்பில்லாத மாநில அரசைப்பற்றி எவ்வளவுதான் திட்டுவது எழுதுவது.

மத்திய அரசு

இன்றைய புதிய பொருளாதார கொள்கை என்றும் தாரளமயமாக்கல் என்றும் திறந்த சந்தைப் பொருளாதாரம்என்றும் சொல்லப்படுகிற பெரும் முதலாளிகளுக்கு குடை பிடிக்கும் பொருளாதாரக் கொள்கைகள் 1991ல் அறிமுகப்படுத்தப் பட்டதாக அறிந்தாலும் டாட்டா போன்ற பெரும் முதலாளிகளையே அதற்கு முன்னர் அரசுடமையாக்கல் மற்றும் இன்னபிற அரசு கொள்கைகள் மூலம் திறரடித்ததாகவும், இன்று தனது தேவைகளுக்கேற்ப அரசுகளையும் அரசு நிர்வாகத்தையும் வளைக்கும் ரிலையன்ஸ் நிறுவனமே புதிய பொருளாதார கொள்கைகள் வரும் வரையில் பற்பல அரசு விதிமுறைகளை சட்ட விரோதமாக மீறியும் உடைத்தும் அரசின் உயர் அதிகாரிகளையும் அரசியல் தலைவர்களையும் சரியான முறையில் கவனித்தும் இருந்து வந்ததாக கேள்விப்பட்ட வகையில் ஏனைய்யா இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் ஒரு அமெரிக்க முதலாளியை கேள்வி கேட்க வக்கில்லாமல் விருந்தினர் மாளிகையில் தங்க வைத்து விருந்து சாப்பாடு போட்டு மாநில முதல்வரின் சிறப்பு விமானத்தில் அனுப்பி வைத்தது ( இலவசமாய்த்தானா இல்லை அதற்கும் ஏதாவது தனியாக கமிசன் கிடைத்ததா ? ) என்று கேள்வி கேட்போருக்கு ஏன் அவர்களால் உண்மையைச் சொல்ல முடியவில்லை என்று புரியவில்லை.

தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள். உண்மை இதுதான்.

சாவு நமது வீட்டில் என்பதற்காக வந்த விருந்தாளிக்கு நமது கஷ்டத்தை காட்ட முடியுமா என்ன ? அதனால்தான் நமக்கு மட்டுமே உரித்தானதாக நாம் சொந்தம் கொண்டாடி வரும் விருந்தோம்பலை அப்போதும் அவ்வளவு ஆயிரம் இழவுகள் விழுந்த வேளையிலும் காட்டியது இந்திய அரசு.

எனவே மத்திய அரசின் விருந்தோம்பல் கொள்கையை அறியாது பேசும் மக்கள் யாவரும் மன்னிப்பு கேட்டுக்கொள்ள சமயம் வாங்கித்தரும்மாறு யாராவது எல்லாம் கொள்ளையடித்த பெரியவரை அழைக்கிறேன்.

இந்திய தேசியத்திற்காக போராடி உயிர் விட்ட எழுபத்தைந்து மத்திய ரிசர்வ் காவல் படையின் வீரர்கள் உயிருக்கு போராடிக் கிடந்த நேரத்தில் அவர்களுக்கு உதவி செய்யவா நமக்கு விமானமும் ஹெலிகாப்டரும். எதாவது ஒரு பெரு முதலாளியின் நிறுவனத்தில் விபத்து ஏற்பட்டால் அவர்களுக்கு பொதுமக்களின் கோபத்தால எவ்வித இழப்பும் ஏற்பட்டு விடாமல் காக்க எப்போதும் அவை காத்திருப்பில் இருக்க வேண்டியது அவசியம் என்ற கொள்கை வகுத்த தலைவர்கள் நமது விருந்தோம்பலை உலகறியச் செய்யும் நடவடிக்கைகளுக்கு தோழர்கள் யாவரும் தோள் கொடுக்குமாறு வேண்டுகிறேன்.

மற்றொரு தூணாம் அரசாங்கம்

அரசாங்கத்தைப் பற்றி என்ன சொல்வது. அரசும் நானே அரசாங்கமும் நானே என்று எல்லா துறைகளையும் மந்திரி பதவி கொடுத்து அவங்க கையிலயே வைத்துக் கொண்ட பிறகு அதனை பற்றி தனியாக சொல்ல வேண்டியதில்லை.

இருந்தாலும் பாருங்கள் இன்னும் இந்த ஐ ஏ எஸ் மற்றும் ஐ பி எஸ் அதிகாரிகள் தான் உண்மையிலேயே நாட்டை ஆள்கிறார்கள் என்பது கிட்டத்தட்ட உண்மையே. எந்த அரசியல்வாதிக்கும் திட்டங்களை வாகுத்துக் கொடுப்பதும் எந்த சட்டத்தையும் வரைவு செய்வதும் மற்றும் சட்டவடிவு பெற்ற பின்னர் அவற்றை நடைமுறைப் படுத்துவதும் எல்லாமே இவர்கள்தான். (ஆனால் இறுதியாக எல்லாவற்றுக்கும் ஒப்புதல் அளிக்கும் அதிகாரத்தை நமது மந்திரிகள் கையில் வைத்திருபதால் இவர்களும் கொள்ளையில் தனியாக ஈடுபட முடியாமல் இந்த வீணாய்ப்போன ஒன்றும் தெரியாத அரசியல்வாதிகளையும் சேர்த்துக் கொண்டு அவர்களுக்கும் பெரும் பங்கு சம்பாரித்துக் கொடுக்க வேண்டியிருக்கிறது என்பது தனி சோகக் கதை.)

ராகுல் காந்தி தனது மொபைலை விமான நிலையத்தில் தவற விட உடனே அரசாங்கம் அதானுங்க அரசு அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை அரசு அதிகாரிகளின் செயல்திறனுக்கே ஒரு உதாரணம்..

அதேபோல பாருங்களேன் அவர்கள் போபால் சம்பவத்தில் என்ன அசுர வேகத்தில் நடவடிக்கை எடுத்தார்கள் என்று

சம்பவம் நடந்தது. 02.12.1984

குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது. 01.12.1987

வெகு விரைவாக மூன்றே நாட்களில் வருடங்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த மத்திய புலனாய்வுத்துறையினருக்கு (சி பி ஐ - C B I)யாரேனும் ஒரு பாராட்டு விழாவேனும் நடத்தியிருப்பார்களா இந்த நன்றி கெட்ட போபால் மக்கள். அதனாலேயே உச்ச நீதி மன்றம் தனது தீர்ப்பில் 13.09.1996 இல் வழக்கின் இந்திய தண்டனை பிரிவை மாற்றி குறைந்த தண்டனை அளிக்கும் பிரிவின் கீழ் விசாரிக்கும் படி சொல்ல சோர்ந்து போன சி பி ஐ ஆனது அதற்கு அதிக நீதிபதிகள் கொண்ட பெஞ்சிற்கு மேல்முறையீடு ஏதும் செய்யாமல் விட்டுவிட்டது.

இருந்தாலும் இவ்வளவு தூரம் வந்து விட்ட பிறகு அரசியல் தலைவர்களின் கீழே வேலை செய்யும் அரசாங்கத்தின் செயல்பாடுகளுக்கும் அதிகாரிகளின் செயல்பாடுகளுக்கு ஒரு உதாரணம் கொடுத்து விடுகிறேன் பாருங்கள்.

முன்னாள் ஹரியானா டி.ஜி.பி எஸ்.பி.எஸ்.ரதோர் தனது அதிகாரத்தை அரசாங்க பதவியை எவ்வளவு உண்மையாக உபயோகம் செய்தார் என்றும் அதற்கு துணையாக ஹரியானா காவல்துறை எப்படியெல்லாம் நேர்மையாக செயல்பட்டது என தெரிந்து கொள்வீர்களேயானால் போதும் இந்திய அரசாங்கத்தின் அத்துணை செயல்பாடுகளும் உங்களுக்கு நொடியில் அத்துபடியாகி விடும்.

உண்மையிலேயே தெரியாதவர்கள் ruchika case அல்லது former hariyana DGP S.P.S Rathore என்று கூகுலாத்தாவிடம் தேடிப்பாருங்கள்.

. மூன்றாம் தூணாம் நீதித்துறை

பலரும் இன்று இந்த தீர்ப்பை விமர்சிக்கிறார்கள். உண்மையில் விமர்சிக்க வேண்டிய விசயம் இவ்வழக்கின் முக்கிய திருப்பமான இவ்வழக்கினை இந்திய தண்டனை சட்டம் பிரிவு கொலைக்குற்றமல்லாத மரணம் வேண்டியதில்லை குற்றமுறு கவனக்குறைவு (criminal negligence) என்ற பிரிவின் கீழ் விசாரித்தால் போதும் என்ற உச்ச நீதிமன்றத்தின் முடிவைத்தான்.

இப்போது அளிக்கப்பட்ட தீர்ப்புதான் பதிவு செய்யப்பட பிரிவுகளின் கீழ் வழங்கப்படக் கூடிய அதிகபட்சம். இத் தன்டனையை இவ்வழக்கு பதியப்பட்டபின் அதிகரித்திருந்தாலும் அது அந்த வழக்குக்கு பொருந்தாது. (உள்ளதைத்தாணுங்க சொல்லறேன்). எனில் இந்த தீர்ப்பை விமர்சிப்பவர்களை என்னவென்று சொல்வது. உண்மை அன்றே அவ்வழக்கின் முடிவு தீர்மானிக்கப்பட்டுவிட்டது. அதன்பின்னர் அதனை வெளியிட எடுத்துக்கொண்ட காலம்தான் இத்துணை ஆண்டுகள். இப்படிப்பட்ட தீர்ப்பை வழங்கிய நீதித்துறைதான் இந்திய அரசியலமைப்பின் மூன்றாம் தூண் என்பதில் பெருமிதம் கொள்வோம்.

எனக்கு நீதி முறை சம்பந்தமாக நீண்ட காலமாக இருந்து வரும் ஒரு சந்தேகம்.

ஆயிரம் குற்றவாளிகள் விடுவிக்கப்படலாம் ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்போர் தாமதமாக வழங்கப்படும் நீதி அநீதி என்பதனை கருத்தில் கொள்ளவதில்லை.

இப்போ கொஞ்ச காலமாய் இருக்கும் சந்தேகம்.

நம்ம கர்நாடக தலைவலி தலைமை நீதிபதி தினகரன் ஐயாவுக்கு நீதி எப்போங்க கிடைக்கும்.

..........................................................................................................................................................................

அட விடுங்க தீர்ப்புதான் வந்துடுச்சே அப்புறமா என்னாச்சுன்னு பார்ப்போம்.

வழக்கின் தீர்ப்பு வந்து ஒரு வாரம் நல்ல நாடகம் நடைபெற்றது. எல்லா மந்திரிகளும் கூட்டம் போட்டுக் கொண்டே இருந்தார்கள் அட அதுதான்யா மீட்டிங்கு. எவ்வளவோ பணமெல்லாம் கோடிக்கணக்கில் ஒதுக்கீடு பண்ணியிருக்காங்க. எவ்வளவு பணம்னு பார்த்தா பாதிக்கப்பட்ட எல்லாருக்கும் ஒரு கடலை மிட்டாயும் கூட ஒரு தேங்காய் பர்பிக்கும் போதும்.

இங்க இன்னும் ஒரு மனுஷன் கூடவா எங்கயும் பாக்கி இல்லை.

த்தூ.. நாசமாய்ப் போகட்டும் இந்த இந்திய வல்லரசும் அதன் மக்களாட்சியும்.

@@@@@@@@@@@@@@@@@@@.

நான்காம் தூண என்று அவர்களே சொல்லிக் கொள்வதால் அதனைப் பற்றி குறிப்பிடுவதும் குறிப்பிடாமல் போவதும் ஒன்றும் பெரிய விடமில்லை என்பதால் அதனை தனியாக இணைத்துள்ளேன்.

நான்காம் தூணாம் பத்திரிகைத் துறை.

நான்காம் தூண் என்று அவர்களே சொல்லிக்கொள்கிற பத்திரிகை துறையைப் பற்றி அதிகம் விமர்சிக்க முடிவதில்லை. அது பற்றி மற்ற செய்திகளை விடவும் முக்கியத்துவம் அளித்தார்கள் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. ஆனால் தோல்வியடைந்த திரைப்படங்கள் முதல் நடிகைகளின் உடல்நலம் வரையான அத்துணை பிரச்சினைகளுக்கும் நடுவில் சில நல்ல பத்திரிகைகள் இந்த தீர்ப்பு குறித்தும் பேசின என்பதில் சந்தேகமில்லை.

ஆனால் இவை யாவும் இவ்வழக்கின் இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு மாற்றம் செய்யப்பட்ட போது என்ன செய்தன என்று அறியுமளவுக்கு நான் அப்போது இல்லை என்பதால் நான் அந்த விடயத்தை விட்டு விடுகிறேன்.

-மனிதன்

பி.கு: இக்கட்டுரையை எழுதி இந்த போபால் தளத்திற்காக அனுப்பிய நண்பர் மனிதமுள்ள "மனிதன்" அவர்களுக்கு நன்றி.

கொலைகார ‘டௌ’-வே வெளியேறு!

0 comments
கொலைகார ‘டௌ’-வே வெளியேறு!

ஆக்-15 முற்றுகை

ஆகஸ்டு-15, காலை 10.30 மணி,

பேரணி துவங்குமிடம்: காசி தியேட்டர், சென்னை.

பேரணி சேருமிடம், முற்றுகை: டௌ கெமிக்கல்ஸ் அலுவலகம், கிண்டி, சென்னை.

அனைவரும் வருக‌

இந்தியனின் உயிரின் விலை மூன்று ரூபாய் - கார்த்தி

3 comments

போபால் விடயத்தை முதலில் நான் எழுதிய பொழுது எனிடம் கேட்க பட்ட கேள்விகள் , "ஓட்டுனர் விபத்தை ஏற்ப்படுத்தினால் எப்படி வண்டிக்கு சொந்தக்காரரை கைது செய்ய முடியும் ", அதனால் அன்டேர்சன் குற்றமற்றவர் என்று விவாதம் .சரி அந்த விடயத்தை கொஞ்சம் விவரமாய் புரிந்து கொள்வோம் . மெத்தில் ஐசோ சயனைடு என்ற திரவம் வெளியில் லீக் ஆகி விஷ வாயுவை கக்கியது . இந்த மூல பொருளை வைத்து தான் "செவின்" என்ற பூச்சி கொல்லி மருந்து தயாரிக்க படுகிறது . ஐசோ சயனைடு விஷத்தை கக்கும் என்பதால் இதே பொருள் அமெரிக்காவில் வேறு ஒரு சூத்திரத்தில் அதவது மெத்தில் ஐசோ சயனைடு உபயோகப்படுத்தாமல் இதே மருந்தை தயார் செய்ய முடியும் . ஆனால் மெத்தில் ஐசோ சயனைடு செலவு கம்மி , அதிக லாப வெறி கொண்ட முதலாளியின் நோக்கம் தான் போபால் படுகொலை . முதலில் 1969 முதல் 1975 வரை இதற்க்கு அனுமதி மறுக்க பட்டுள்ளது ஏன் எனில் இது பழைய தொழிற்நுட்பம் மற்றும் இதன் மூலம் ஏற்படும் விபரீதங்களும் பயங்கரமாய் இருக்கும் என்பதால் முதலில் அமைச்சகம் இதற்க்குஎதிர்ப்பு தெரிவித்து உள்ளது , 1975 ஆண்டே அதற்க்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது .

மெத்தில் ஐசோ சயனைடை அதிகமாய் கலங்களில் சேர்த்து வைப்பது ஆபத்து , விபத்து நடந்த அன்று அதிகமாய் தான் சேர்த்து வைக்கப்பட்டுள்ளது . மேலும் ஒரு கலன் வெப்பம் கூடினால் மற்றொரு கலனுக்கு மாற்றி , அதன் வெப்பத்தை மட்டுப்படுத்த வேண்டும் , இந்த முறை தான் அமெரிக்காவில் இதே UNION CARBIDE நிறுவனத்தில் உள்ளது ஆனால் இந்தியாவில் அதற்க்கான வழி இல்லாமல் இருக்கிறது கட்டமைப்பு . மேலும் குளிரூட்டப்பட்ட
நிலையிலேயே இருக்க வேண்டும் ஆனால் செலவின் காரணமாய் குளிர்சாதனத்தை போடாமல் இருந்து இருக்கிறது நிர்வாகம் . இதை எல்லாம் செய்து விட்டு அன்டேர்சன் குற்றவாளி அல்ல தொழிலாளர்கள் செய்த தவறே காரணம் என்று கூச்சம் இல்லாமல் சொல்கிறார்கள் .

அமெரிக்காவில் நான்கு அடுக்கு பாதுகாப்பில் இருக்கும் தொழிற்சாலை இங்கே இல்லை அதே தொழிற்சாலை பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறது முதலாளியின் லாப நோக்கத்திற்காக . அமெரிக்காவில் இதை போல் செய்து விட்டு சும்மா போக முடியுமா என்ன ???? பிரிட்டிஷ் பெற்றோலியம் இதை போல ஒரு விபத்துசெய்தது அமெரிக்காவில் இழப்பு என்னமோ கம்மி தான் 12 பேர் , சில மீன்கள் இறந்தன , அதற்க்கு 2000 கோடி டாலர்கள் நிவாரணம்
ஆனால் இங்கே இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகம் , லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர் இங்கே இழப்பீடு இருபத்தி ஐந்து வருடத்திற்கு பிறகு 47 கோடி டாலர் , அதாவது அமெரிக்காவில் வாழும் கடல் நாய் , மற்றும் மீன்களை விட மனித உயிர்கள் மயிர்களை போன்றது என்கிற மனோபாவமே .

பாராளுமன்றத்தில் அணுசக்தி மசோதா ஒன்று வரப்போகிறது ,அதை போபால் விடயத்தின் பொழுது வந்தால் எதிர்ப்பு கிளம்பும் என்று தள்ளி வைத்து உள்ளனர் . அதன் சாராம்சம் எவ்வளவு தான் மக்கள் செத்தாலும் , இனிமேல் இதை போல விபத்து நடந்தால் முன்னூறு கூடி மட்டுமே இழப்பீடு தரவேண்டும் . அதாவது இந்தியாவில் இருக்கும் 100 கோடி மக்களின் உயிரின் விலை 300 கோடி , ஒரு உயிரின் விலை மூன்று ரூபாய். எவ்வளவு கொடுமை . அதாவது நீங்கள் என்ன வேண்டுமானாலும் அடியுங்கள் , எங்கள் முதுகு காத்து கிடக்கிறது , என்று இந்தியா முதுகை திரும்பி காண்பிக்கிறது , இது வெளி நாட்டில் இருக்கும்முதலாளிகளை ஈர்க்கும் என்கிறார்கள் . தனியார்மயம் , உலகமயம் என்று சொல்பவர்களின் மூஞ்சியில் சேர் , கரி பூசப்பட்டுள்ளது . அதாவது பல லட்சம் உயிர்களின் மதிப்பை விட ஒரு முதலாளியின் லாபம் முக்கியமானது என்கிறது .

மேலும் இதை போல ஒரு நிறுவனம் பேரழிவை ஏற்ப்படுத்தினால் 30 வருடம் வரை அந்த மக்களுக்கு நிறுவனமே பொறுப்பு , அந்த பொறுப்பை முப்பது முதல் பத்து வருடமாய் குறைக்கிறது மசோதா . சட்டங்கள் ஆளும் வர்கத்திற்க்கு , ஜனநாயகம் ஆளும் வர்கத்திற்க்கு . இன்று போபால் நாளை சென்னை அல்லது மதுரை ?????? பல போபல்கள் வெடித்து கொண்டிருக்கின்றன , போபால் உலகமயத்தின் trailor மட்டுமே , இன்னும் அதன் கொடுராமான படம் ஆரம்பிக்கவில்லை .

பி.கு: இது வெண்ணிற இரவுகள் கார்த்தி எழுதியது. இங்கே மீள்பதிவு செய்யப் பட்டிருக்கிறது.

விடத்தை கக்கிய சட்டம் போபால் - வெண்ணிற இரவுகள்

2 comments

இன்று காலையில் தேனீர் கடையில் செய்தித்தாளை புரட்டியவுடன் எனக்கு பேரதிர்ச்சி என்று சொன்னால் அது மிகை , நான் என்ன தீர்ப்பு வரும் என்று நினைத்தேனோ அதைபோலவே போபால் விடவாயு வழக்கில் நம் சட்டம் நடந்து கொண்டிருக்கிறது . நமக்கு சரி தவறு என்று விமர்சனம் செய்ய தகுதி இல்லை என்று வைத்துக்கொண்டாலும் பாதிக்கப்பட்டஅந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன என்பது கண்கூடாய் தெரிகிறது .

அதிலும் ஏழு பேருக்கு மட்டுமே தண்டனை இரண்டு ஆண்டுகள் , முதாலாளி வாரேன் அன்டேர்சன் சொகுசாய் உள்ளார் . அதுவும் அந்த தண்டனை பெற்ற குற்றவாளிகள் தொகை இருபத்தி ஐயாரிரம் கட்டிவிட்டு ஜாமீனில் விடுதலை ஆகிவிட்டார்களாம் . என்ன கொடுமை???? தீர்ப்பே இருபத்தி ஐந்து ஆண்டுகள் கழித்து தான் என்றால் , என்ன கொடுமை .

இந்திய அரசு, அமெரிக்கா அண்டேர்சென்னை விசாரணைக்கு அனுமதிக்க வில்லை என்று சப்பை கட்டுகட்டுகிறது . ஆனால் காசாப் கூட பாகிஸ்தானை சேர்ந்தவன் தான் , அவன் வழக்கு என்றால் ஒரு ஆண்டில் தீர்ப்பு வரும் , தூக்கில் போடப்படுவான் ஏன் என்றால் அங்கு அவன் கலகம் செய்த இடம் முதலாளிகளின் கூடாரம் தாஜ் ஹோட்டல் ஓபராய் ஹோட்டல் போன்ற இடங்கள் . ஆனால் இங்கு போபால் விடயத்தில் லட்சக்கணக்கில் மக்கள் பாதிக்கபட்டாலும் இங்கு மாட்டிக்கொண்டது முதலாளி, சட்டம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது.

BSNL NETWORK வைத்து சுமார் 1500 கோடி ஏமாற்றிய அம்பானி வெறும் 90 லட்சம் அபராதம் கட்டிவிட்டு வெளியே வருவார்கள் , இதை 100 ரூபாய் திருடிய திருடன் ஐம்பது பைசா மட்டும் அபராதம் கட்டி அடிவாங்காமல் வெளியே வரமுடியுமா என்ன??? விட வாயு கொன்றதை விட , சட்டம் விடவாயுவை கக்கிகொண்டிருக்கிறது.

ஏன் அன்டேர்சன் இந்தியாவிற்கு கொண்டுவரப்படவில்லை , குறைந்தபட்ச தண்டனை கூட கொடுக்க முடியாதா ????? உங்கள் சட்டம் எல்லாம் பஸ்சில் டிக்கெட்எடுகாதவன் , பிக் பக்கெட் போன்ற இடங்களில் தான் செல்லுபடி ஆகுமா???????? ஏன் உங்கள் சட்டம் மேட்டுக்குடி மக்களிடம் செல்லுபடி ஆக வில்லை .

சரி போபால் விடயத்திற்கு வருவோம், 100 பேரை கொன்ற கசாப் தீவிரவாதி என்றால் , 1000 கணக்கில் கொன்ற இன்னும் கூட லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படும் போபால் போன்ற இடத்தில் எப்படி இருக்க வேண்டும் தண்டனை . வெறும் ரெண்டு ஆண்டு தண்டனையாம் அதுவும் முதலாளி அன்டேர்சன் அவருக்கு கிடையாது , ஏன் என்றால் அவரை விசாரிக்க அமெரிக்க அனுமதிக்கவில்லையாம்.

அப்படி அனுமதிக்கவில்லை என்றால் உலகத்தின் முன் இந்திய ஊடகங்கள் இதை கவனத்திற்கு கொண்டு போய் சேர்த்து இருக்க வேண்டுமே . உலகமே அன்டேர்சன் எதிராய் குரல் கொடுக்க வைத்திருக்க வேண்டுமே . கசாப் விடயத்தில் வீரத்தை காட்டிய ஊடகங்கள் இதில் ஏன் எதிர்ப்பை பதிவு செய்யவில்லை .

ஏன் என்றால் இவர்கள் நோக்கமே முதலாளியை காப்பாற்றுவது . முதலாளிக்கு ஓபராய் ஹோடேலில் தீங்கு நேர்ந்தால் உலகத்தின் முன் தீவிரவாதம் என்று கூச்சலிடு . ஆனால் போபாலில் செத்து இருப்பது வெறும் பத்தாயிரம் பேர் தானாம் அதுவும் சாமானியர்கள் , போய் சாகட்டும் , அன்டேர்சன் பாதுக்காபாய் இருக்கிறாரா என்று பாதுகாக்கிறது சட்டம் . இந்திய அரசு அவரை விசாரணைக்கு கூப்பிட்டு இருக்காது என்பதே உண்மை ,மனித உயிர் என்பது முதலாளிகளின் எச்சமா ????? பணம் உள்ளவனே வாழ தகுதி உள்ளவனா????

-வெண்ணிற இரவுகள்

பி.கு: இது வெண்ணிற இரவுகள் தளத்தில் 07-ஜீன்-2010 அன்று வெளி வந்தது.

போபால் - மறக்கக் கூடாத துரோகம் --- தீபா

4 comments

குழந்தையை அணைத்துக் கொண்டு படுக்கும் போதெல்லாம் மூடிய கண்களுக்குள் இந்தக் காட்சி வருகிறது.


போபால் - தாமதமாகும் நீதி அநீதி என்பார்கள்.

"நாங்கள் முப்பது கோடிப் பேர்களும் நாய்களோ பன்றிச் சேய்களோ" என்று கேட்டான் பாரதி. நூறு கோடியைத் தாண்டிய பின்பும் இந்நிலை தான் தொடர்கிறதென்றால் நெஞ்சம் கொதிக்கிறது.

அதுவும் வெள்ளைக்காரர்களல்ல; நம்மை ஆண்டு கொண்டிருக்கும் அதிகார வர்ககமே மக்களை வெள்ளை எலிகளாகப் பயன்படுத்திக் கொள்ளச் சம்மதித்திருக்கிறதென்றால் இது என்ன ஜனநாயகம்?

உணவில்லை, உடையில்லை, அடிப்படைத் தேவைகள் எதுவும் இல்லை; உயிர் வாழ அனுமதியும் பறிக்கப் படுகிறது இந்தச் சபிக்கப்பட்ட தேசத்தில். தொடர்ந்து பல சந்ததிகளுக்கு!

ஆம், போபால் கொடூரம் அன்று மடிந்த மக்களோடு முடிந்து விடவில்லை. நிலத்தடி நீரையும் காற்றையும் பெண்கள் கருப்பைகளையும் சந்ததி சந்ததியாய்த் தாக்கி வரும் அக்கிரமத்தை என்ன சொல்வது?

போர், ஆதிக்கம் என்று வந்த நாடுகள் கூட நம் நாட்டில் இத்தகைய கொடுமையை நிகழ்த்தியதாக நான் அறிந்ததில்லை. வாணிபம் செய்ய வந்த பேடி ஒருவன் நம் சொந்த சகோதரர்களின், அப்பாவி எளிய இன்னுயிர்களைக் கூறு போட்டுக் குதறிச் சென்றிருக்கிறான்.

அப்படுபாதகமான செயலைப் புரிந்தவனுக்குத் தங்கத் தட்டில் மரியாதை வைத்து உயிர்ப்பாதுகாப்பு தரப்பட்டிருக்கிறது.
இப்போது கவன்க்குறைவு என்ற ஒரே காரணத்தைக் காட்டி இரண்டு வருடங்கள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.

இன்றளவும் சுகபோகமான வாழ்வு வாழ்ந்து வரும் வாய்ப்பையும் அவன் சிறிதும் இழக்கவில்லை. ஏன்? அவன் அமெரிக்காக்காரன். காசு போடும் முதலாளி.
சீ சீ, காசுக்காகப் பெண்டு பிள்ளைகளை விற்கும் புரோக்கர்கள் கூட இந்த அரசியல் வாதிகளை விட மேலானவர்களாகத் தெரிகிறார்களே.

அதுவும் இது விபத்து அல்ல திட்டமிட்ட படுகொலை என்பதை ஆதாரங்களுடன் அறியும் போது...ஐயோ!


உலகெங்கும் பல இயக்கங்கள் போபாலில் இறந்த மக்களுக்காகக் குரல் கொடுக்கின்றன. ஆனால் சொந்த தேசத்தில் இப்படிப் பட்ட துரோகம் நிகழ்ந்திருக்கிறது. இம்மண்ணில் பிறந்ததற்காக அவமானப் படும் சூழல் கூட வருமென்று நினைத்தும் பார்க்கவில்லை. ஆனால் போபால் விஷயத்தில் இது உண்மையாகிறது.

தயவு செய்து இந்த மின்னிதழைப்
படியுங்கள். பகிர்ந்து கொள்ளுங்கள். நம்மால் குறைந்தபட்சம் செய்யக் கூடியது விழிப்புணர்வு ஏற்படுத்துவது மட்டுமே. அதைச் செய்யத் தவற வேண்டாம்.

மேலும் படிக்க:




- தீபா

பி.கு: இது தீபா அவர்கள் அவர்களின் சிதறல்கள் தளத்தில் எழுதியது. அவரின் அனுமதியோடு இங்கு மீள்பதிவு செய்திருக்கிறோம்.
Copyright © போபால்