முடியாத ஒரு பெருந்துயரத்தின் கதை - எஸ்.வி.வேணுகோபாலன்

8 comments

கண்ணெல்லாம் எரியுதம்மா
கண்ணெல்லாம் எரியுதம்மா

உறக்கம் பிடிக்காமல்
புரண்ட சிறுவன்
இப்போது தாயை எழுப்பாமல்
தானாகத் தூங்குகிறான்

தூங்க மறுத்துத்
தூளியை உதைத்துத்
துடித்துக் கதறிய
பச்சிளம் குழந்தை
இப்போது நிம்மதியாகத் தூங்குகிறது

அந்தப் பாழிரவில்
நகரத்தின் தெருக்களெங்கும்
காலன் புகுந்து சென்றான்
முகமூடி கொள்ளைக்காரனைப் போல

ஊரைப் பிளப்பது போல
ஓலம் கிளம்பியது
தேவாலயத்து மணிகள்
விரிசல்கள் கண்டன

விதேசி மூலதனத்தின்
இரசாயனக் கிரியையால்
பால் வடியும் நிலவெல்லாம்
சீழ் வடிந்தது
போபால் தெருக்களெங்கும்
பிணங்கள் பிசுபிசுத்தன

இத்தனைக்கும் அசையாது
கால் சுருட்டி நிற்கிற
கருப்புச் சிலந்தியைப் போல்
அந்தத் தொழிற்சாலை
நகரத்தின் ஒரு புறத்தில்........

- பிரளயன் (சந்தேகி கவிதைத் தொகுப்பு - ஜூன் 1990)

கருப்புச் சிலந்தியைப் போல் நின்ற அந்தத் தொழிற்சாலை இன்றும் போபால் நகரத்தில் நின்று கொண்டுதான் இருக்கிறது. யூனியன் கார்பைடு இரசாயனத் தொழிற்சாலை. டிசம்பர் 2, 1984 நள்ளிரவைக் கடந்து 3ம் தேதியின் குளிர்கால விடியலுக்குச் சிலமணி நேரத்துக்கு முந்தைய அந்த நேரத்தில் நடந்த மீத்தைல் ஐசோ சயனேட் என்கிற விஷவாயுக் கசிவு பயங்கரம், உறங்கிக் கிடந்த அப்பாவி உயிர்களை நொடி நேரத்தில் ஆயிரக்கணக்கில் விழுங்கிவிட்டது. லட்சக் கணக்கானோரைச் செயலிழக்கச் செய்துவிட்டது. கால்நடைகளும், பிற ஜீவராசிகளும் கூடத் தப்பவில்லை.

அன்றோடு முடிந்துவிடவுமில்லை - உயிர்களுக்கு எதிரான அந்தத் தாக்குதல். உடனடியாக இறந்த சில ஆயிரம் பேர் 'கொடுத்து வைத்தவர்கள்' என்று நினைக்கும் அளவிற்குக் கொடூரமான நிலைக்குத் தள்ளப்பட்டனர் உயிரிருந்தாலும் மிக மோசமான பாதிப்புகளைச் சந்தித்தவர்கள். இந்த டிசம்பர் 3ம் தேதி வந்தால் 25 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிடப் போகிற அந்தக் கொடிய விபத்தினால் (அது விபத்தா, இரசாயனப் போர் ஆயுதம் ஒன்றின் பரிசோதனையா என்ற கேள்விகள் அப்போதிருந்தே எழுப்பப்பட்டு வருகின்றன என்பது ஒருபுறம் இருக்க) பாதிக்கப்பட்டோருக்கான முழு நிவாரணம் இன்னமும் அவர்களை எட்டாதிருப்பதும், அராஜக நிகழ்வுக்குப் பொறுப்பான பெரும்புள்யூ௨ள் இன்னமும் தண்டிக்கப்படாததுமான உண்மைதான் நம்மைச் சுடுவது.

இந்தியாவின் ஹிரோசிமாவாக வருணிக்கத்தக்க அளவிற்கு, மத்தியபிரதேச மாநிலத்தின் தலைநகரமான போபால் இந்த இரசாயன வாயுவிபத்திற்கு அடுத்த சில மணிநேரங்களிலிருந்து பரிதாபமான நிலைக்கு மாற்றப்பட்டது. போபால் நகரத்தின் மொத்தமுள்ள 56 வார்டுகளில் 36 வார்டுகள் பாதிக்கப்பட்டன. அதில் இருந்த 6 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டதாக அரசுதரப்பில் பதிவான விவரங்களே சொல்கின்றன. மாநகரத்தின் ஏழை மக்கள் வடக்கே வசித்துவந்த ஒதுக்குப்புறப் பகுதியில்தான் நிறுவப்பட்டிருந்த இந்த இராட்சத தொழிற்சாலை. அங்கே என்ன தயாரிக்கப்படுகிறது, என்ன அபாயமான சூழல் அது, கொஞ்சம் அசந்தாலும் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்பது எதுவும் அறிந்திராத ஏழை மக்கள். போபால் நகரில் 1981 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி கல்வியறிவு விகிதம் வெறும் 34 சதவீதமே. இதுவும் பெண்களுக்கு 19 சதவீதமாக இருந்தது. வெளியிடங்களிலிருந்து புலம்பெயர்ந்து வேலை தேடி வந்த மக்களும் சேர்ந்து வாழ்ந்த அந்தப் பூமியின் மேற்பரப்பில் படிந்த இரத்தக் கறையும், குவிந்த மண்டையோடுகளும் என்றும் வேதனைக்குரியவை.

பூச்சிக்கொல்லி தயாரிக்க நிறுவப்பட்ட இந்தத் தொழிற்சாலையின் தொட்டிகளில் ஒன்றிலிருந்து கசிந்த விஷவாயுவின் அளவு 40 டன்கள் என்று சொல்லப்படுகிறது. ஏற்கெனவே ஆலைக்குள் 1981ல் நடந்த விபத்தில் ஒரு தொழிலாளி மரணமடைந்திருந்த போதிலும், அதற்குப் பின்னரும் வெவ்வேறு விதமான சிறு பிரச்சனைகளும், விபத்துகளும் நடைபெற்றிருந்த போதிலும், பாதுகாப்பு ஏற்பாடுகள் வலுப்படுத்தப் படவில்லை என்பது மட்டுமல்ல, இருந்த பாதுகாப்பு அம்சங்களின் தரமும் தாழ்த்தப்பட்டிருந்தது. விஷ வாயு கசிவின் நெடியை மூக்கு நுகர்ந்த அடுத்த நொடியே அது நுரையீரலை எட்டித் தனது கைவரிசையைக் காட்டிவிடும் என்றிருக்க, சிறிய ஈரத்துணியால் மூக்கை மூடிக்கொண்டு அதிவேகமாக அந்தப் பகுதியை விட்டே ஓடியிருந்தால் ஒருவேளை அதிக பாதிப்பிலிருந்து தப்பித்திருக்கலாம் என்ற அடிப்படை அறிவியல் ஆலோசனை கூட அறிந்திராத மக்கள் பகுதியில் தான் இந்த விபத்து ஏற்பட்டிருந்தது. அதுவும், அவர்கள் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த நள்ளிரவைக் கடந்த வேதனை மிக்க நேரத்தில்....

நிலைமையின் தீவிரமறிந்து, யூனியன் கார்பைடு நிறுவனத் தலைவர் வாரன் ஆண்டர்சன் இந்தியாவிற்கு வந்ததும், மத்திய அரசு தொடுத்திருந்த வழக்கின் அடிப்படையில் அவர் உடனே கைது செய்யப்பட்டார். ஆனால் அது வெறும் நாடகம் என்பது, உடனடியாக அவருக்கு எதிர்ப்பின்றி ஜாமீன் வழங்கப்பட்டதும், அடுத்த நொடியே தனி விமானமொன்றில் அவர் அமெரிக்காவிற்குத் தப்பி ஓடி ஒளிந்ததும், பின்னர் பல்லாண்டுகள் போபால் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் ஒருபோதும் அவர் ஆஜர் ஆகாமல் நழுவிக் கொண்டிருந்ததும், அவரை இந்தியாவிற்குக் கொண்டுவர பிரத்தியேக நடவடிக்கை எடுக்குமாறு உச்சநீதிமன்றமே வழங்கிய சிறப்பு உத்தரவை அமலாக்க இந்தியப் புலனாய்வுத் துறையோ, மத்திய அரசோ இன்றுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காதிருப்பதுமான பல நிகழ்வுகளிலிருந்து வெளிப்பட்டது. ஆண்டர்சன் மட்டுமல்ல, இவ்வளவு படுபயங்கரமான ஒரு சம்பவத்திற்குப் பொறுப்பானவர் என்று ஒற்றை ஆள் கூட அடையாளம் காணப்படவோ, விசாரணைக்கு உட்படுத்தப்படவோ, தண்டிக்கப்படவோ இல்லை என்பது அதிர்ச்சியளிப்பதாகும்.

அமெரிக்காவின் பணவெறி பிடித்த வழக்கறிஞர்கள் பலர் போபால் நகரத்திற்கு வந்திறங்கி அப்பாவி மக்களுக்கு நிவாரணம பெற்றுத்தரும் ஆசைகாட்டிக் கொண்டிருந்த அதே வேளையில், அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் இந்திய அரசு தொடுத்திருந்த வழக்கில், இந்தியாவின் மிக பிரபல வழக்கறிஞரான நானி பால்கிவாலாவைத் தனக்குச் சாதகமாக வாதாட நியமித்திருந்தது யூனியன் கார்பைடு. மிக உயர்ந்த மனிதர்களாகச் சமூகத்தில் தங்களைக் காட்டிக் கொண்டிருக்கும் இத்தகைய பல நபர்களுக்கு, தேச பக்தியைவிடவும் தொழில்பக்தியும், காசு பக்தியுமே விஞ்சி நிற்கும் என்பது மீண்டும் நிரூபணமானது. முகம் தெரியாத, பெயர் அறியப்படாத ஏழை எளிய மக்களின் உயிரும், உடல் ஊனமும் அமெரிக்க நீதிமன்றத்தில் பேசப்படக் கூடாதது, வழக்குக்கு அங்கு இடமில்லை என்று இந்திய அறிவுஜீவியையே பேச வைத்தது அந்நிய கம்பெனியின் பணபலம்.

அதுமட்டுமல்ல, லாபவெறியும், இரத்தவெறியுமிக்க இந்த நிறுவனத்தின் சார்பில் அடுக்கடுக்காக முன்வைக்கப்பட்ட பெரும்பொய்கள் சாதாரணமானவை அல்ல. விஷவாயு கசிந்தது சீக்கிய தீவிரவாதிகளின் வேலை (அக்டோபர் 1984 இறுதியில் தான் பிரதமர் இந்திரா காந்தி இரண்டு சீக்கிய தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார் என்பதைப் பயன்படுத்தி !) என்றது. எங்கள் நிறுவனமே அல்ல, அது இந்தியக் கம்பெனி, இந்தியத் தொழிலாளர்களால் மோசமாகக் கட்டப்பட்டிருந்தது என்றது. சட்டப்படியாக, பன்னாட்டு நிறுவனம் என்ற ஒரு வரையறையே எங்கும் செய்யப்படவில்லை என்று கூசாமல் சொல்லுமளவு தனது பொறுப்பைத் தட்டிக் கழிக்க முயன்ற அதன் முயற்சிகள் அம்பலப்படுத்தப்பட்டன.

ஆனாலுமென்ன, 3000 கோடி டாலர் கேட்டதற்கு வெறும் 47 கோடி டாலர் நஷ்ட ஈடுதான் விதிக்கப்பட்டது. இதன் நடுவே, நயவஞ்சகன் ஆண்டர்சன் 1986ல் பணி ஓய்வு பெற்றார். நிறுவனத்தை டவ் கெமிகல்ஸ் என்ற வேறு நிறுவனத்திற்கு விற்றுவிட்டார். டவ் கெமிகல்ஸ் எங்களுக்கு எதுவும் தொடர்பில்லை என்று சாதிக்க ஆரம்பித்துவிட்டது. இதற்குள் ஆண்டுகள் பல உருண்டோடிவிட்டன. உயிர்பிழைத்து பாதிப்புற்றிருப்போர் போராட்டக் குழுக்கள், முக்கியமாக பெண்கள் போராட்டக் குழு உதயமாயின. இந்த அமைப்புகளின் போர்க்குரலும், தீர்மானமான போராட்டமும் இதுவரை தேசம் சந்திக்காதது. எங்கே சென்றாலும், அநீதி இழைத்தவனைத் துரத்திப் பிடிப்போம் என்று அமெரிக்காவரை சென்ற இந்தக் குழுவின் தலைவியர் பெரிய கல்வியறிவோ, செல்வமோ படைத்தவர்களே அல்லர்.

இதில் முக்கியமாக அறியப்படும் இரட்டையர், ரஷிதா பீ - சம்பக் தேவி சுக்லா என்கிற இஸ்லாமிய-இந்து பெண்மணிகளாவர். மத பேதங்களை மீறி இலட்சிய வெறியோடு பாதிக்கப்பட்டவர்களை ஒருங்கிணைக்க இவர்கள் எடுத்துவரும் முயற்சிகள் அளப்பரியவை. டவ் கெமிகல்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தின் வாசலில் தர்ணா நடத்த அமெரிக்காவின் சிகாகோ நகரம் சென்றவர்கள். 'துடைப்பக்கட்டையால் அடிப்போம் வாருங்கள்' (ஜாடு சே மாரோ) என்ற இயக்கத்தின் பெயரால், போபாலில் துவங்கி புது தில்லி வரை எத்தனையோ கிராமங்களுக்குச் சென்று சாதாரண மக்களிடமிருந்து துடைப்பங்களைத் திரட்டிக் கொண்டு போய்ப் போராட்டம் நடத்திவந்த இவர்களுக்கு 2004ம் ஆண்டின் கோல்டுமேன் விருது (1990ல் கோல்டுமேன் தம்பதியரால் சுற்றுச்சூழல் இயக்கவீரர்களுக்காக நிறுவப்பட்ட விருது) வழங்கப்பட்டது.

ஆண்டர்சன் மற்றும் பொறுப்பான அதிகாரிகளை இந்தியாவிற்குக் கொணர்ந்து கிரிமினல் வழக்கு தொடரப்படவேண்டும், வாயுக்கசிவின் முழு உண்மைகள், பாதிப்பின் விளைவுகள் மக்களது தகவலுக்கு வெளியிடப்படவேண்டும், தொழிற்சாலை அதன் நச்சுக் கழிவுகளோடு உடனடியாக அகற்றப்படவேண்டும், பாதிப்புற்றோர் வாழ்வாதாரங்களுக்கு முழு ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்பதுதான் போபால் விஷவாயுவின் பாதிப்பால் அல்லலுறுவோர் எழுப்பும் குரலாகும். பாதரசம், நிக்கல் போன்ற உலோகங்களும், வேறு பல நச்சு வேதியல் பொருள்களும் மண்ணிலும், உடலிலும், ஏன் - தாய்ப்பாலிலும் கூடக் கலந்துவிட்டிருப்பதன் பாதிப்புகள் சமூக ரீதியாகவே தலைமுறைகளைத் தாக்கிக் கொண்டிருக்கிற பயங்கரம்தான் போபால் நிகழ்வு. தொழிலுக்கும், லாபத்திற்கும் வேட்டைக்காடாக வளரும் நாடுகளைப் பயன்படுத்தும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு எந்தச் சமூகப் பொறுப்போ, தார்மீக மதிப்போ, அரசியல் ரீதியான கடிவாளமோ கிடையாது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியிருப்பது அந்த பயங்கரம்.

'பொன்னார் வளநகரில் வேதாளம் சேர்ந்தது, வெள்ளெருக்கு பூத்தது, பாதாள மூலி படர்ந்தது, உழுமண்ணில், குடிநீரில், சுவாசத்தில், கர்ப்பத்தில் அனைத்திலுமே பாஷாணம், பாஷாணம்.....'. என்று அப்பாவி மக்களைக் கதறடித்துவிட்ட போபால் விஷவாயு கசிவின் இருபத்தைந்தாவது ஆண்டு நிறைவு, இன்றைய உலகமய-தாராளமய சூழலில் எந்த எச்சரிக்கையும் கொள்ளாதிருக்கிற ஆட்சியாளர்களைப் பற்றிய கோபத்தையும், ஏகாதிபத்திய உலகமயமாக்கல் மக்களுக்கு எதிரான தாக்குதலுக்கு அஞ்சாதது என்ற விழிப்புணர்வையும் புதுப்பிக்கிறது

- எஸ்.வி.வேணுகோபாலன்

இதுவா நமது தேசம்? - மாதவராஜ்

8 comments

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களே, “இது பாதிக்கப்பட்டவர்கள் பக்கமாக இல்லை” என ஒரு நீதிமன்றத் தீர்ப்பு குறித்து கோபத்தோடு கருத்து தெரிவிக்குமளவுக்கு போபால் வழக்கில், அநீதி அப்பட்டமாய் தோலுரிந்து போயிருக்கிறது.. மிகப்பெரும் துயரங்களையும் காலம் ஆற்றிவிடும் என்பதும் பொய்யாகி இருக்கிறது. ‘இதுவும் கடந்து போகும்’ என்று சமாதானம் செய்ய முடியாமல் 26 ஆண்டுகள் கழித்தும், கொந்தளிக்கச் செய்கிறது. ஆறாத ரணங்களைக் கீறித் துடிக்க வைக்கிறது.

1984 டிசம்பர் இரண்டாம் நாள் குளிர் இரவில், இந்தியாவே துயில் கொண்டிருந்த நேரம், போபால் மரணத்தின் காற்றை சுவாசித்துக் கொண்டிருந்தது. யூனியன் கார்பைட் தொழிற்சாலையிலிருந்து நாற்பதாயிரம் கிலோவுக்கும் அதிகமான ‘டாக்சிக்’ வாயு கசிந்து, வெள்ளைப் புகை மண்டலமாய் விரிந்து, அயர்ந்து கிடந்த மனிதர்களுக்குள் நுழைய ஆரம்பித்தது.. தொண்டை காந்தலெடுக்க இரும ஆரம்பித்தவர்கள் உடலின் தசைத் துணுக்குகளெல்லாம் மிளகாயின் காந்தலெடுக்க துடித்துப் போனார்கள். கண்கள் எரிய, எங்கும் “ஐயோ, ஓடுங்கள், ஒடுங்கள் என கூப்பாடுகளும், இதயம் அறுந்து வெளியே வந்து விழுமாறு இருமல்களுமாய் கேட்டன. என்ன, ஏது என்று அறியாமல், இலக்கற்று ஓடியபடியே விழுந்தார்கள். மாடுகளும் கதறியபடி, மனிதர்களை முட்டித் தள்ளி ஓடின. யார், எங்கே என யோசிக்க முடியாமல் புத்தி பேதலிக்க, குடும்பங்கள் இருந்த இடம் தெரியாமல் போயின. விடிந்த போது ஈசல் பூச்சிகளைப் போல நகரமெங்கும் மனித உடல்கள் அங்கங்கு கிடந்தன. இருபதாயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்துபோக, ஆறு லட்சத்துக்கும் மேலே மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாயிருந்தனர். உலகமே விக்கித்துப் போனது.

இப்படியொரு பயங்கரம் நிகழக்கூடும் என பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. செப்டம்பர் 1982ல் ராஜ்குமார் கேஷ்வானி என்னும் பத்திரிக்கையாளர், “விழித்துக்கொள்ளுங்கள் போபால் மக்களே, நீங்கள் எரிமலையின் உச்சியில் உட்கார்ந்திருக்கிறீர்கள்” என யூனியன் கார்பைடின் ஆபத்து குறித்து விளக்கியிருந்தார். 1984 நவம்பர் கடைசி வாரம் வரைக்கும், இது குறித்து நான்கு கட்டுரைகள் எழுதியிருந்தார். விபத்து நடப்பதற்கு முன்னர் பலமுறை யூனியன் கார்பைடு நிறுவனத்திற்கு ‘பாதுகாப்பு நடவடிக்கைகள்’ குறித்து எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது. இருபத்தைந்துக்கும் அதிகமான பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்வைக்கப்பட்டன. அவைகளை சரிசெய்யத் தவறியதன் விளைவுதான் இந்த பேரிழப்புகள் என்பதைப் புரிந்து கொள்வதற்கு தடித்த பெரும் சட்ட புத்தகங்கள் தேவையில்லை. நேர்மையும், இதயசுத்தியும், குறைந்தபட்ச விஞ்ஞான அறிவுமே போதும். ஆனாலும் சாலை விபத்துக்குரிய லட்சணத்துடன் வழக்கு நடத்தப்பட்டு, ‘கவனக்குறைவால் ஏற்பட்ட விபத்து’ என்ற தீர்ப்பாகி இருக்கிறது. குற்றம் சுமத்தப்பட்ட ஏழு உயரதிகாரிகளுக்கு இரண்டு ஆண்டு சிறைத்தண்டனையும், ஒரு லட்சம் ருபாய் (2000 டாலர்!) அபராதமும் விதிக்கப்பட்டு இருக்கிறது. மனித உயிர்களை ஒரு பொருட்டாக மதிக்காத முதலாளித்துவத் திமிரில் செய்யப்பட்ட படுகொலைகளுக்கும், பஞ்சமா பாதகத்திற்கும் கொடுக்கப்பட்ட தண்டனையாம் இது. இந்த தேசத்தையும், இந்த மண்ணையும் தங்கள் வீட்டு குப்பைத் தொட்டியாகக் கூட மதிக்காத அந்நிய, அமெரிக்க அயோக்கியர்களுக்கு வழங்கப்பட்ட அபராதமாம் இது! வாழிய பாரத மணித்திரு நாடு!

scalesofinjustice

கைது செய்யப்பட்ட யூனியன் கார்பைடு நிறுவனத்தின் அதிபரான் ஆண்டர்சனை அப்போது மாநிலத்திலும், மத்தியிலும் இருந்த காங்கிரஸ் அரசு யாருக்கும் தெரியாமல் பத்திரமாக அமெரிக்காவுக்கு அனுப்பிவிட்டு, ’காணாமல் போனவராக’ அறிவித்து தங்கள் அமெரிக்க விசுவாசத்தைக் காப்பாறிக்கொண்டது. அப்படி அனுப்ப ஏற்பாடு செய்தவர் அப்போது மத்தியப்பிரதேசத்தின் முதலமைச்சராக இருந்த அர்ஜீன்சிங் என்றும், அதற்கான உத்தரவிட்டவர் ராஜீவ் காந்தி என்றும் இப்போது செய்திகள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. சம்பந்தப்பட்ட விமான பைலட்டிலிருந்து, மாஜிஸ்டிரேட் வரை பலரது வாக்குமூலங்கள் பத்திரிகைகளில் வந்து கொண்டு இருக்கின்றன. ஆண்டர்சனை அரசு காப்பாற்றியது என முன்னாள் சி.பி.ஐ டைரக்டர் பி.ஆர்.பால் சொல்கிறார். இந்தக் குற்றச்சாட்டுக்களை அதற்கே உரிய வரலாற்று குணத்தோடு வேகவேகமாக மறுத்து அறிக்கைகள் விடும் காங்கிரஸ் கட்சி, இந்த அநீதியான தீர்ப்பு குறித்து வாயைத் திறக்கவில்லை. மக்களைவிட, மகராஜாக்களே அவர்களுக்கு எப்போதும் முக்கியம்.

அந்த விஷக்காற்றின் உக்கிரத்தை பாதிக்கப்பட்டவர்களிடம் இப்போதும் பார்க்க முடிகிறது. அடுத்த தலைமுறைக்கும் அது தாவி இருப்பதை, குழந்தைகளிடம் தென்படுவதாக மருத்துவர்கள் சொல்கின்றனர். நிலத்தடி நீரும் பயன்படுத்த முடியாதபடி மோசமாகி இருக்கிறது. ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்றுவரை கிடைத்த நிவாரணம் என்பது தலா இருபத்தையாயிரம் மட்டுமே. அதுவும் இரண்டு தவணகளாக 1994 மற்றும் 2004ல் கொடுக்கப்பட்டு இருக்கிறது. போபால் துயரத்தை எதிர்த்து ஒரு அமைப்பை நிறுவி இன்று வரை போராடி வருகிற ஜெயப்பிரகாஷ் இதனைச் சொல்லி இருக்கிறார். அதுவும் இறந்து போனவர்கள் வெறும் மூவாயிரம் என்ற கணக்கில் மட்டுமே கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த உணமைகளையும், புள்ளி விபரங்களையும் அறிய அறிய, இந்த அமைப்பின் கோரமுகமும், கொடூர குணமும் வெட்ட வெளிச்சமாகிறது.

நமது சட்டத்தில், இதுபோன்ற தவறுகளுக்கு criminal liability சுமத்தும் ஷரத்துக்கள் இல்லையெனவும், அதை சரிசெய்ய வேண்டுமென்று சொல்லப்படுகிறது. இந்தத் தீர்ப்பு குறித்து ஆராய்ந்திட அமெரிக்க் பக்தரும், பெருமுதலாளிகளின் விசிறியுமான ப.சிதம்பரம் தலைமையில் குழு அமைத்திருப்பதாகவும் சொல்லப்ப்படுகிறது. நீதிக்கு குழி தோண்டியாகிவிட்டது. இனி புதைக்க வேண்டுமல்லவா, அதற்குத்தான்!

இந்தத் தீர்ப்பு இன்னொன்றையும் சூட்சுமமாக தெரிவிக்கிறது. அமெரிக்காவுடனான அணு ஒப்பந்தம் குறித்த சட்ட வரையறைகளில் அரசின் நிலைபாடு குறித்த விளக்கம் இருக்கிறது. போபால் விஷக்காற்றை விடவும் பல நூறு மடங்கு ஆபத்து விளைவிக்கும் அணு உலைகள் குறித்த பாதுகாப்பு ஏற்பாடுகளில் ‘கவனக்குறைவால்’ விபத்து ஏற்பட்டாலும், இதே தீர்ப்புதான் அந்த முதலாளிகளுக்கும் என தெளிவாக்குகிறது. தன் வீடு எரிந்து சாம்பலானாலும், அமெரிக்காவுக்கு குடைபிடிக்கும் இந்த அயோக்கியத்தனந்த்தை என்னவென்பது? “விழித்துக் கொள்ளுங்கள் மக்களே”- இதுதான் போபால் துயரமும், போபால் தீர்ப்பும் நம் அனைவருக்கும் சொல்லியிருக்கும் செய்தியும், எச்சரிக்கையும்..

இந்த பெருந்துயரத்திற்கும், பேரிழப்புகளுக்கும் காரணமானவர்களை கடுமையாக தண்டிப்பதும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் தருவதும்தான் நேர்மையான அரசின் கடமையும் நெறியுமாகும். அந்த யோக்கியதை இதுவரை இருந்த எந்த மத்திய அரசுக்கும் இருக்கவில்லை. நீதி கிடைக்கும் வரை உக்கிரத்துடன் இயக்கங்களை நடத்த ஜனநாய்க சக்திகளும், சமூக ஆர்வலர்களும் முன் வரவேண்டும்! “மக்களின் கொந்தளிப்பும், ஆவேசமும் அதிகமாகியதால்தான், ஆண்டர்சனை நாட்டைவிட்டு வெளியேற்றும்படி ஆகியது” என நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இப்போது சொல்கிறார். ஆம், இந்த நாட்டுக்கும், மக்களுக்கும் துரோகம் செய்யும் இந்திய ஆட்சியாளர்களும் இதே காரணத்தால் நாட்டைவிட்டு வெளியேற வேண்டிய ஒருநாள் வரவேண்டும்!

அப்போதுதான் இது நமது தேசமாக இருக்கும்!

- மாதவராஜ்

பி.கு: இது நண்பர் மாதவராஜ் 14-ஜீன்-2010 அன்று அவரது தீராத பக்கங்கள் வலைப்பூவில் எழுதியது. அவரது அனுமதியுடன் இங்கு மீள்பதிவிடப்பட்டிருக்கிறது.

போ(ங்காட்ட)பால் தீர்ப்பு - சித்ரா

9 comments

இந்த தீர்ப்பு, ஒரு தனிப்பட்ட சம்பவத்தில் உள்ள "ஆடு புலி ஆட்டமாக" என்னால் பார்க்க முடியவில்லை.... இத்தனை நீதிபதிகள், ஒரே வழக்கில் மாறி வரும் போதும் கால தாமதமும், பண பலமும் கடுமையாக வழங்க வேண்டிய தண்டனையை நீர்த்து போக செய்து விட்டன.

இந்தியா ஒரே தேசமாக இல்லாத நிலையில் கூட, "வெள்ளையனே வெளியேறு" என்று ஒன்று பட்டு , அநியாய அடக்கு முறைகளுக்கு எதிராக போர் கொடி தூக்கி அடிமைத்தனத்தில் இருந்து மேலோங்கி சுதந்தர காற்றை சுவாசிக்க முடிந்தது....

இன்று - ஒரே இந்தியாவாக.... இந்தியனுக்கு என்று தனித்துவ அடையாளங்களுடன் உலக அரங்கில் காணப்படும் இந்த வேளையில், இப்படி ஒரு தீர்ப்பு வந்து இருப்பது எதை காட்டுகிறது?

இந்தியா, இன்னும் பணத்துக்கும் மனசாட்சியை கொன்று விட்டு அரசியலும் வாணிகமும் (politics, business and industrial production) செய்பவர்களுக்கு அடிமையாய் இருக்கிறது என்றா?

இல்லை, இந்தியர்கள் சுதந்தரத்துக்கு பின், சுகவாசிகளாய் - சுயநலக்காரர்களாய் - தன் கவலை மட்டுமே பெருங்கவலை என்ற குறுகிய வட்டத்துக்குள் வந்து விட்டார்கள் என்றா?

நாட்டில் ஒரு பகுதியினர் அடக்கப்பட்டால், மற்றவர்கள் வெகுண்டு வந்து ஆவன செய்வார்கள் என்ற தேசிய உணர்வு மக்கி விட்டது என்றா?

காரணங்கள் அனைத்தும் தெரிந்தும், கண்டும் காணாதது போலவும் புரிந்தும் புரியாதது போலவும், 'தன் வேலையே தனக்கு உதவி' என்று இருக்க வேண்டிய கட்டாயத்துக்குள் சமூதாய அமைப்பு தள்ளி விடுகிறது என்றா?

தலைவலியும் காய்ச்சலும் வந்தவனுக்கு மட்டும் தான் என்று ஒதுங்கி போக பழகிவிட்ட மெத்தனப் போக்கு என்றா?

பாரதியின் பாடலில் கண்ட அக்கினி பற்றி கொள்ள - தாகூரின் கவிதைகளில் கண்ட தேசப்பற்று மனதில் நிறைய - சுதந்தர போராட்ட வீரர்களின் ஆவேசமான பேச்சுக்களில் பொங்கி எழுந்து வந்த இந்தியர்கள், இன்று வியாபாரத்தில் கண்ணும் கருத்துமாய் இருக்கும் தொலைகாட்சி மற்றும் சினிமா மாயையில் மயங்கி, உணர்வுகளை தொலைத்து விட்டார்கள் என்றா?

மக்களின் பலவீனங்களை முழுமையாக அறிந்து கொண்டு, "என்ன செய்து விடப் போகிறார்கள்?" என்ற தைரியத்தில் எழுதப்பட்ட தீர்ப்பு..... மக்களின் அவல மன நிலையை "அவர்கள்" நன்கு புரிந்து கொண்டு, தங்களுக்கு சாதகமாக்கி கொண்டு உள்ளதை வெளிப்படுத்தும் தீர்ப்பு.

ம்ம்ம்ம்...... தீர்ப்பை திருத்த முடியாது போகலாம். போபாலில் இழந்த உயிர்களுக்கு மதிப்பு இல்லாமல் போய் இருந்து இருக்கலாம்.....

ஆனால், மக்களிடையே ஒரு விழிப்புணர்வு வேண்டும்.... இனி, ஒரு இந்திய சகோதரன் அழும் போது, கைகளில் டிவி ரிமோட் வைத்து கொண்டு, "அடுத்து என்ன ப்ரோக்ராம்?" என்று தேடி கொண்டு இருக்காமல், அதே கையால், அழுபவரின் கண்ணீர் துடைக்க மனம் பதற வேண்டிய உள்ளம் வேண்டும். அந்த மாறுதல் வரும் போது, இந்த மாதிரி மீண்டும் ஒரு சம்பவம் நடக்கும் அளவுக்கு ஒரு பொறுப்பற்ற சூழ்நிலையோ - இல்லை, அதற்கு இப்படி ஒரு "கண்துடைப்பு" தீர்ப்போ எப்படி வர இயலும்?

முதாலாளித்துவம் கொழுத்து போய் வளருகிறது என்று சாடுவது மட்டும் போதாது..... சராசரி மனிதனும் மனித நேயத்தை, பிறர்க்கென வாழும் மனதை, தேசிய உணர்வை - முழுவதுமாய் பணத்துக்கும் தற்பெருமைக்கும் தன்னலத்துக்கும் அடகு வைக்க கூடாது.


-சித்ரா

பதிவுலக தோழி "கொஞ்சம் வெட்டி பேச்சு" சித்ரா அவர்கள் இத்தளத்திற்காக எழுதிக் கொடுத்தது. இன்னும் பல பதிவர்கள் மற்றும் வாசகர்களிடமிருந்து இது போன்ற பதிவுகளை எதிர் பார்க்கிறேன்.


ச்சீ, தூ, பேமானிங்களா...- ஜாக்கி சேகர்

8 comments


நம் மக்களுக்கு இருப்பது போல மறதி வியாதி மற்ற நாட்டு மக்களுக்கு உண்டா இல்லையா என்று எனக்கு தெரியவில்லை... எவன் வீட்ல எழவு விழுந்தா எனக்கென்ன என் வீட்ல டிவி சிரியல் ஒழுங்காதெரிஞ்சா போறும் என்று நினைப்பதுதான்... இந்தியா முழுதுமான மக்களின் தற்போதைய மனநிலை என்பேன்...

இந்தியாவின் மிகப்பெரிய சோகம் 1984ல் யூனியன் கார்பைடு நிறுவனத்தில் வெளியான நச்சுபுகை... 5லட்சத்து 75 ஆயிரம் பேரை கண் பார்வை போய்...முச்சுதினறலில் பலர் சுவாசபாதிப்புக்குள்ளாக்கி மரித்து போக செய்தது.....

20,000 மக்களின் கனவுகள் சிதைக்கபட்டன....சுதந்திர இந்தியாவில் அமெரிக்க ஓநாய்கள் நம் மக்களை செல்லாகாசாக நினைத்ததன் விளைவு... 20,000ம் மக்கள் இறந்து போனார்கள்.... அது ஒரு தொழிற்சாலை விபத்து என்று சப்பை கட்டு கட்டியது அரசாங்கம்...இரண்டாம் தலைமுறை குழந்தை பிறப்பின் போது கூட குழந்தைகள் ஊனமாக பிறக்கின்றனர்.... இது எல்லாருக்கும் தெரிந்த சேதிதான்...


26 வருடங்களுக்கு பிறகு கொடுத்த தீர்ப்பில் இரண்டு வருட தண்டனை கொடுத்து விட்டு.. தண்டனை பெற்றவர்கள் உடனே ஜாமீனில் வெளியே வந்து இருக்கின்றார்கள்... அது அமெரிக்க கம்பெனி என்பது ஒரு காரணம்... பொதுவா பணம் இருக்கறவனுக்கு மட்டுமே இந்த உலகத்தில் நிம்மதியான வாழ்க்கை வாழ முடியும்...

இந்த சாபக்கேடு இந்தியாவில்மட்டும் அல்ல உலகில் இருக்கும் எல்லா நாடுகளிலும் பொருந்தும்...சிபிஜ விசாரனை சரியில்லை என்று எல்லோரும் குறைபட்டுக்கொண்டு இருக்கும் போது... இங்கு நமது பிரதமரே சரியில்லை எனும் போது எதையும் குற்றம் சொல்ல முடியாது...


அமெரிக்கா அதிபருக்கு ஆய் போவதில் ஏதாவது சிக்கல் என்றால் நமது பிரதமர் பயந்து போய்...இங்கிருந்து மருந்துகளை அனுப்பி... என்ன போயிடிச்சா? போயிடிச்சா? என்று ஆர்வம் காட்டுகின்றார்...

நம்ம பக்கத்துல இருக்கற சின்ன நாடு இலங்கை... நம்ம இந்திய மீனவன் கச்சை தீவு கிட்ட இலங்கை கடற்படையால் தினமும் செம மாத்து வாங்குறான்... அதை கேட்க துப்பில்லை, ஏன்டா அவனங்களை அடிக்கிறிங்கன்னு இந்திய கடற்படை இதுவரை கண்டித்ததாக சரித்திரம் இல்லை... சின்ன நாட்டையே கண்டிக்க துப்பில்லை...


அமெரிக்கா அதுவும் எவ்வளவு பெரிய நாடு அது என்ன சொன்னாலும் ஒரு பிரதமர் கேட்டுக்கொண்டு இருக்கின்றார்....அதிபருக்கும் துடைக்க பேப்பர் இல்லை தண்ணி இல்லை என்ற சின்ன வருத்தம் அவர் நாட்டில் விசனபட்டாலும் இவர் பொங்கி இரண்டு பிளைட்டில் பேப்பரும் சொம்பும் அனுப்பி வைக்கின்றார்....அவர்கள் சொல்வதே வேதவாக்காய் செயல் படுகின்றார்....

சரி இந்த தீர்ப்பு சொல்லும் சேசதி என்ன?

இந்தியாவுல எந்த தப்பை செஞ்சாலும் பெரிசா செய்யனும்.....அதுதான் கெத்து...
===========


20 ஆயிரம் பேர் சாவுக்கு காரணமானவனுங்களுக்கு 2வருட சிறை தண்டனை உடனே ஜாமீன்...

ராஜீவ் காந்தியும் கூட சிலர் இறந்து போனதுக்கு ஆயுட்கால சிறை.... ஆட்டோ சங்கர் அப்படி என்ன தப்பு செஞ்சிட்டான்? வீரப்பன் அப்படி என்ன தப்பு செஞ்சான்...எதுக்கு அவனுங்களுக்கு தண்டனை? இரண்டு வருட சிறையும் 25 ஆயிரம் அபராதம் கொடுத்து விட வேண்டியதுததானே...???
================


நிறுத்துக்கொட்டை தாண்டி வண்டி நிறுத்தினால் சாமானியனுக்கு ஸ்பாட் பைன்.....ஹெல்மெட் போடவில்லை என்றால்.. சட்டத்தை மீறியதாக ஒரு வழக்கு....

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை ஏற்று, ஆட்சிக்கு வந்து, அரசு நிலத்தை வாங்கிய முதல்வருக்கு உச்சநீதி மன்றம் ஒரு கண்டனத்தை மட்டும தெரிவிக்கின்றது....
=================

சோ இந்தியாவில் திங் பிக்...குற்றத்திலும் .....

சரி இந்திய ஊடகங்கள் இதனை சரியாக கையாளவில்லையா? இந்தியாவின் பாதி ஊடகங்கள் பண்ணாட்டு பண்ணாடைகளிடம் மாட்டி பல வருடம் ஆகின்றது... சரி அப்படியே... இந்த விஷயத்தை வெளிக்கொண்டு வந்தாலும் ஷல்பா தாலியை கையில் கட்டிக்கொண்ட செய்திக்கு பொதுமக்கள் கொடுக்கும் முக்கியத்துவம் இது போலான பொது விஷயத்தில் கொடுப்பதில்லை என்பதே உண்மை...
==========



அரசியல்வாதிங்க ஒரு விஷயத்துக்கு கொஞ்ச நாளைக்கு முன்னாடி நடந்த சம்பவத்துக்கு ஒரு சீன் போட்டானுங்க பாருங்க.. அது செம காமெடி..

பாராளுமன்றத்தில் தீவிரவாதிகள் உள்ளே புகுந்து சுட்ட போது...ஐயோ இந்திய இறையான்னைமக்கு பெரிய வெட்கம் அது இது என்று பதறியது... அதுக்கு உடைந்தையானவங்களுக்கு தூக்கு.......

ஆனா 20 ஆயிரம் பேர் செத்ததுக்கு 2வருட தண்டனை....அதே போல் இந்தனை பேர் இறந்த வழக்கு விசாரனை சாதாரன ஒரு நீதி மன்றத்தில் நடக்கின்றது...

ரோட்டில் போகும் போது நடக்கும் சாமானிய மனிதருக்குள் நடக்கு சண்டையில் கூட ஒரு நியாயம் இருக்கின்றது..ஆனால் நீதி மன்றம் போய் கேட்க நினைக்கும் நியாங்கள்... கோர்ட்டில் பிரிட்டிஷ்காரன் போட்டு விட்டு போன பழைய பேனிலேயே தூக்கு போட்டு தொங்கிவிடுகின்றன...இப்போதெல்லாம் நீதி.... நீதி மன்றங்களில் கதறகதற வன்புனர்ச்சி செய்து அனு அனுவாக கொலை செய்கின்றார்கள்..



ங்கோத்தா உங்க வீட்ல ஒரு பிள்ளை கை சும்பி போய் பிறந்தா ஏத்தக்குவிங்களாடா? அங்க இரண்டு தலைமுறையா அப்படிதான் இருக்கு....
=========
பல கோடி வழக்குகள் இந்தியாவில் தேங்கி கிடக்கின்றன.. சாமனிய மக்கள் தீர்பை எதிர்பார்த்து காத்து இருக்க....
எல்லாத்துக்கும் நீதி சொல்லும் நீதிபதிகள்.. வெள்ளைகாரன் காலத்தில் நீதி மன்றத்துக்கு கோடை விடுமுறை விட்டது போல் இன்னும் தொடர்வது எந்த விதத்தில் நியாயம்.. அது பற்றி 2008ம் வருடத்தில் நான் அப்போது எழுதி யாராலும் படிக்காமல் போய் விட்ட பதிவு இங்கே..கிளிக்கவும்
========
இது போலான நீதிகள் இந்தியாவில் கிடைக்கபெற்றால்... மா துஜே சலாம்.... என்று பாடும் போதும் ஜனகனமன பாடும் போது என் உடலில் ரோமங்கள் சிலிர்க்கும்...அது போல பல இந்திய குடிமகன்களுக்கும் சிலிர்க்கும்...அந்த சிலிர்ப்பை இது போலான தீர்ப்புகள் கொடுத்து சிலிர்க்காமல் செய்து விடுவார்கள் போல......
========
இதே நிலை நீடித்தால் பொது மக்கள் எல்லோரும் நக்சல் பாரி,மாவோவில் சேர்ந்து துப்பாக்கி தூக்கும் நிலை வெகு சீக்கிரத்தில் வந்தாலும் ஆச்சர்யப் பட தேவை இல்லை...

-ஜாக்கி சேகர்

பி.கு: இது 09-06-2010 அன்று நண்பர் ஜாக்கி சேகர் அவரது பிருந்தாவனமும் நொந்தகுமாரனும் என்ற வலைப்பூவில் எழுதியது. உங்களுக்காக இங்கு மீள்பதிவு செய்யப் பட்டிருக்கிறது.

போபால் அநீதி - தோழர் மோகன்

7 comments

25 வருடம் கழித்து தீர்ப்பு வருகிறது ஆம் குற்றம் தான், இருந்தால் என்ன குற்றம் இழைத்தவர்கள் கோடீசுவர இந்தியர்கள் என்பதால் போனா போகுதுனு இரண்டாண்டு கால சிறை தண்டனை விதித்திருக்கிறது இந்திய நீதி மன்றம், இதில் வேடிக்கை இது தான் தீர்ப்பு வந்த சாய்ங்காலமே குற்றம்புரிந்த அனைவருக்கும் பிணை விடுதலை, பிறகென்ன அந்த நல்லவர்கள் (நயவஞ்சகர்கள்) கொன்றது இந்தியாவின் ஒற்றை கலங்கரை விளக்கான, இந்தியாவின் வல்லரசு கனவை நினைவாக்க பிறந்த ஒற்றை விடிவெள்ளியான, இந்தியாவின் பாதுகாப்பில் ஊழல் செய்த, தமிழீழ மக்களின் குரவளையை அறுத்த காங்கிரசின் தலைவர் ராஜீவ் காந்தியைவா? இல்லையே உழைப்பை மட்டுமே நம்பி, உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்து போன வெறும் 8000(மொத்தம்: 22146 பேர்) சாமானிய இந்தியர்கள் மன்னிக்க இந்தியா என்ற நிலப்பரப்பில் வாழ்வதால் இந்தியர்களாக ஆக்கப்பட்ட இந்தியர்களை தானே, இதுக்கு இரண்டு ஆண்டே ரொம்பக் கூட...

அப்ப போபாலில் விசவாயு தயாரிக்க அனுமதி வாங்காமல், எந்த ஒரு பாதுகாப்பு விதிமுறையையும் சரிவர பின்பற்றாமல், Union Carbide யால் இயக்கி வந்த அந்த தொழிற்சாலையில் ஏற்பட்ட விசவாயு கசிவால் நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதிக்கப்பட்ட 2 லட்ச பொது மக்களுக்கும் இது தான் நீதியா? என்று நீங்க யோசிச்சாலோ,கேட்டாலோ, இது தான் பதில்,


இந்தியாவுல எப்பவுமே முதலாளிக்கு ஒரு நீதி, உழைப்பாளிக்கு ஒரு நீதி... அதிகாரம் படைச்சவனுக்கு ஒரு நீதி, அன்றாடங்காய்ச்சி ஒரு நீதி... அரசியல்வாதிக்கு ஒரு நீதி, அடிமை இந்தியனுக்கு ஒரு நீதி...

இது தான் இந்தியா! இது தான் இந்திய மக்களாட்சி!!!

இன்னோரு செய்தி, போபால் விசவாயு வழக்கில் முக்கிய குற்றவாளியான Union Carbide ன் இயக்குனர் இந்தியப் பிரிவுத் தலைவர் வாரன் ஆண்டர்சன் இப்போ அமெரிக்க தீவுல Beer அடிச்சிட்டு மல்லாந்து படுத்துக்கிட்டு கனா கண்டுகிட்டுயிருக்கான் காவாளி, அவன ஒரு தடவக்கூட இந்தியா விசாரிக்கவில்லை. ஏன்டானு கேட்கீறிங்களா?

இந்திய பெரு முதலாளிகளுக்கும், தரகு முதலாளிகளுக்கும், அரசியில்வாதிகளுக்கும் நல்லாவே தெரியும், பெரும்பாலான இந்தியர்கள் எது நடந்தாலும்(இந்தியாவின் கிரிக்கெட் தோல்வியையும், புதுப்பட ரிலிசையும் தவிர்த்து) மனசுல வச்சுக்காம மறந்துறுவாங்கனு, அதே போல எவ்வளவு அடிச்சாலும் தாங்குற ரொம்ப நல்லவுங்கனும் நல்லாவே தெரியும் அந்த அறிவாளிகளுக்கு...

ஏதோ சில விளங்காத பையபுள்ளைக பாதிக்கபட்டவங்களோடு சேர்ந்து எதிர்வினையோ, புரட்சியோ, போராட்டமோ நடத்தினா, கருணைக்கடல் இந்திய அரசு தன்னுடைய காவல் படையை ஏவி விட்டு சும்மா பட்டைய கிளப்பிருவாக, நாமும் அந்த நிகழ்வ அடுத்த நாள் செய்திதாள்ல படிச்சிட்டு சே! பாவம்யில்ல னு உதட்ட சுழிச்சிட்டு ராவணன் படத்துக்கு எப்ப முன்பதிவு(ரிசர்வேசன்) தொடங்குதுனு இந்திய நாட்டோட மிகமுக்கிய பிரச்சனையை கூட்டமா சேர்ந்து விவாதிச்சுட்டுயிருப்போம்....

சே! மெய்சிலிர்க்குது உலகத்தோட மிகப்பெரிய மக்களாச்சியோட ஒரு குடிமகன் நானு நினைக்கிறபோது.... பேஷ்! பேஷ்! ரொம்ப நன்னாயிருக்கு!!!

த்தூ!!!


கொஞ்சம் கூடவா நமக்கு சுரணையில்லாம போச்சு, இது எப்படி நீதியாகும், லட்ச லட்சமா சாமானியன் செத்தாலும் குற்றம் செய்தவன விசாரிக்க கூட செய்யாது நம்ம நீதிதுறை, அப்படியே தண்டனைக் குடுத்தாலும் காலையில இரண்டு வருட சிறை, சாய்ங்காலம் பணை விடுதலை, சீ! கேவலமாயில்ல, பகுத்தறிவு அற்ற விலங்குகள் கூட ஏத்துக்காது இப்படி ஓர் கேவலத்தை நீதியென்று, ஆனால் இந்தியர்களாக ஆக்கப்பட்ட நாம் ஏற்போம்! ஏன் என்றால் நாம் மெத்த படித்தவர்கள்! அடிமை வாழ்க்கையை ரசிப்பவர்கள்! சக மனிதனை சுரண்டுவதும், சுயநலமும் மனித இயல்புகள் என்று நம்பும் நல்லவர்கள்! எல்லாவற்றுக்கும் மேலாக இனப்படுகொலையே நடந்தாக்கூட, இலவசங்களையும் சலுகைகளையும் வாங்கிட்டு "மன்னிப்போம்! மறப்போம்!!!" என்ற உயர் கொள்கை கொண்ட சுத்தமான தியாகிகள்!!! நாம்

- தோழர் மோகன்

பதிவுலக நண்பர்களே. போபால் தளத்தில் வெளியிடப்படும் முதல் பதிவு இது. இதனை எழுதியவர் பதிவர் தோழர் மோகன். இதை இவர் அவரது "அடங்கா தமிழன்" வலைப்பூவில் 09-06-2010 ல் எழுதியது. உங்களுக்காக அது இங்கே தொகுக்கப் படுகிறது. உங்களிடமிருந்து நிறைய கருத்துரைகளையும், இது பற்றி எழுதும் ஆர்வத்தையும் எதிர் நோக்கி வெளியிடுகிறோம்.

நண்பர்களே வாருங்கள்

2 comments

பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்!

நான் உங்களிடம் கேட்கப் போவது பண உதவியோ, பொருளுதவியோ அல்ல. முற்றிலும் மனிதத்திற்கான உதவி. நான் மற்றும் சில நண்பர்கள் போபாலில் நடந்த அநீதி குறித்து எழுதிக் கொண்டிருக்கிறோம். அதை நாங்கள் பதிவேற்றுவதின் நோக்கம் விளம்பரமோ அல்லது பிரபலமடையவோ அல்ல. அங்கு நடந்த அநீதிகள் அனைத்து மக்களுக்கும் புரிய வைக்கப் பட வேண்டும் என்பதற்காக மட்டுமே.

நண்பர் வெண்ணிற இரவுகள் கார்த்தி சமீபத்தில் சில பதிவுலக நண்பர்களை போபால் குறித்து தொடர்பதிவு எழுதுமாறு கேட்டிருந்தார். ஆனால் அவர்களில் வால்பையனைத் தவிற வேறு யாரும் விருப்பம் தெரிவித்ததாகத் தெரியவில்லை. இந்த போபால் விட(ய)ம் முடிந்து போன ஒன்றல்ல. வெறும் ஆரம்பம் அவ்வளவுதான். இது நம் மக்களை அழிக்க உருவெடுத்திருக்கும் முதலாளித்துவத்தின் முதல்படி.

இதற்கே 23000 பேர் பலி என்றால் யோசித்துப் பாருங்கள். பின் வரும் காலங்களில் நாமோ அல்லது நம் உறவினர்களோ இது போன்ற பட்டியல்களில் இடம் பெறப் போவதாக ஒரு எச்சரிக்கை மணி அடிக்கிறது இந்த போபால் பிரச்சினை. இப்போது பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இதைத் தவறவிடுவதில் எனக்குத் துளியும் விருப்பமில்லை.

அதற்கான முயற்சியாய் இந்த போபால் பிரச்சினைக்காக ஒரு புதிய வலைப்பூவை பதிவுலகின் குரலாய் ஆரம்பித்து வைக்கிறேன். இங்கு தினமும் பதிவர்கள் இந்த போபால் மற்றும் அதன் தொடர்புடைய பிரச்சினைகள் குறித்து தினம் ஒரு பதிவாய் அவர்கள் விருப்பப்படி வெளியிடலாம்.

இந்த வலைப்பூவின் நோக்கம் இந்த போபால் போன்ற பிரச்சினைகள் குறித்து பதிவர்கள் மற்றும் வசகர்கள் கலந்துரையாடி ஒரு புரிதலை ஏற்படுத்தி கொள்ள வேண்டும் என்பதே. இங்கு இந்த போபால் பிரச்சினைக் குறித்து பதிவர்கள் யார் வேண்டுமானாலும் பதிவுகளை எழுதலாம். நண்பர்கள் செய்ய வேண்டியதெல்லாம்

* உங்களுக்கு இந்த பிரச்சினை குறித்து குரல் கொடுக்கும் எண்ணம் இருந்தால் bhopal.public@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு உங்களின் கீழ்காணும் விபரங்களை அனுப்பி வையுங்கள்

பெயர், தொடர்பு எண்(விருப்பமிருந்தால்), மின்னஞ்சல், வலைப்பூ முகவரி -(இவை எதுவும் வெளியிடப் படா)

* நான் மற்றும் என் நண்பர்கள் இந்த விடயம் குறித்து உங்களுக்கு எடுத்துக் கூறி தெளிவு ஏற்படுத்த தயாராக இருக்கிறோம்.

* உங்களுக்கு ஒரு புரிதல் வந்ததும் அதைப் பற்றி எழுதுங்கள். அதை bhopal.public@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். அது உங்கள் பெயருடன் (அ) புனைப்பெயரில் இந்த தளத்தில் வெளியிடப் படும். உங்களுக்கு விருப்பமிருப்பின் அந்தப் பதிவை உங்கள் வலைப்பூவிலும் வெளியிட்டு இணைப்பு கொடுத்தால் உங்கள் வாசகர்களிடம் கொண்டு சேர்க்க ஏதுவாக இருக்கும்.

* நீங்கள் முன்னரே இந்த விடயம் குறித்து எழுதியிருந்தாலும் அதை அனுப்பி வைக்கலாம். அதை இங்கு வெளியிட்டு விவாதம் செய்வோம்.

* பதிவை எழுதியவர் மட்டும்தான் விவாதங்களுக்கு பதிலளிக்க வேண்டும் என எண்ணாமல் நண்பர்கள் அனைவரும் விவாதத்தில் ஈடுபட வேண்டும்.

இந்த விடயத்தில் நாம் ஒருங்கிணைந்து செயல் படுவோம். நாம் சினிமா, முரளிதரனின் 800 விக்கெட்டுகள் பற்றியெல்லாம் பதிவெழுதுகிறோம், அவைகளுக்கு வாக்களித்து ஆதரவு தெரிவிக்கிறோம். இது நமக்கான இடம். இங்கு நம் ஆதரவை ஒருமித்து வெளிப்படுத்துவோம்.

நாம் அடிமையாகிக் கொண்டிருப்பதை அனைவருக்கும் புரிய வைப்போம்.
Copyright © போபால்